Wednesday, November 25, 2009

கனவு


..

என்றோ ஆழ்கடலில்
மூழ்கிப்போன காற்றின்துளி
இன்று மேலெழுந்து
கொப்பளிக்கும் நீர்க்குமிழி.

நாளை உதிக்கப்போகும்
ஆதவனின் முகம் காண...
இன்றே பூத்து நிற்கும்..
மனக்குளத்தில் தாமரைப் பூ.

...

Monday, November 23, 2009

2012 பேரழிவு : அரசியல் தலைவர்கள் அறிக்கை



மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

மாயர்கள் கட்டிடக்கலை, வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது மாயர்களின் காலண்டர். மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்கள் துணை கொண்டு மாயர்களின் காலண்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மாயர்களின் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் நிறைவடைவது தான் இப்போது பலருக்கும் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

மாயமந்திரங்களிலும், வானவியல் சாஸ்திரங்களிலும் கைதேர்ந்த கில்லாடிகளான மாயர்கள் ஏன் 2012-ல் காலண்டரை முடித்துவிட்டிருக்கிறார்கள். அன்று உலகம் அழியப் போவதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானதிருஷ்டியால் கண்டுவிட்டார்கள் என்று கொலைவெறியோடு வதந்திகளை கிளப்பி வருகிறார்கள் பலர். ஆரம்பத்தில் தென்னமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் சூடாக விவாதிக்கப்பட்டஉலகின் கடைசி நாள்விவாதம், இப்போது மூடநம்பிக்கைகளில் புரையோடிப் போன ஆசிய நாடுகளுக்கும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறது.

சரி. மாயன் காலண்டர் என்னதான் சொல்ல வருகிறது, பார்ப்போமா?

சூரியக் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பூமி 2012ஆம் ஆண்டு, சூரிய மண்டலத்தின் நேர்க்கோட்டுக்கு வருமாம். இதையடுத்து நேர்க்கோட்டிலிருந்து முன்பு பயணித்த திசையிலிருந்து நேரெதிராக விலகி பயணிக்கும்போது புவியின் காந்தப்புலங்கள் திசைமாறி, துருவங்கள் இடமாற்றம் ஏற்படும் என்பதாக மாயன் காலண்டர் கணிக்கிறது. ‘துருவங்களின் இடமாற்றம்என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அது 2012ஆம் ஆண்டு தான் ஏற்படுமா என்பதை எந்த விஞ்ஞானியாலும் உறுதியாக சொல்ல இயலவில்லை.

துருவங்கள் இடம் மாறினால் நமக்கென்ன நஷ்டம் வந்தது என்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மலை உயரத்துக்கு சுனாமி வரும், தினம் தினம் பூம் பூம் பூகம்பம், பனிமலைகள் எரிமலைகளாக மாறிச்சீறும். ஒட்டுமொத்தமாக இயற்கைப் பேரழிவுகள் மனிதகுலத்தை ஆங்காரப் பசியோடு கபளீகரம் செய்யும். இப்படியெல்லாம் பயமுறுத்திக் கொண்டே போகிறார்கள். மாயன் காலண்டரும் இந்த ஊழிப்பெருந்தீ, மற்றும் ஊழிப்பெருநீர் வகையறாக்களை உறுதி செய்கிறது.

சூரிய மண்டலத்துக்கு ஒருநாள் என்பது, நம் பூமியின் கணக்கில் பார்த்தோமானால் 25,625 வருடங்களாம். இதை மாயர்களின் காலண்டர் ஐந்து காலக்கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டது. நான்கு காலக்கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டதாம். இப்போது நடைபெறுவது ஐந்தாவது காலக்கட்டமாம். கடைசிக் காலக்கட்டம். அதுவும் கூட 2012, டிசம்பர் 12ல் முடிவடைகிறதாம். எனவேதான் இதைஜட்ஜ்மெண்ட் டேஎன்று பலரும் அஞ்சுகிறார்கள்.

(நன்றி : விக்கிபீடியா)

2012 திரைப்படம் மாயன் நாட்காட்டியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும் உலக வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் பேரழிவினை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

சரி. உண்மையிலேயே 2012 ல் உலகம் அழியப்போவது உறுதியானால் நம்ம ஊரு அரசியல்வாதிகள் எப்படி அறிக்கை விடுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.



கருணாநிதி

அய்யகோ! இந்த பூமிப்பந்து அழியப்போவதுகண்டு நான் மனதுக்குள் புழுங்கியழுவது யாருக்காவது தெரிகிறதா? குறளோவியம் படைப்புகள் குப்பைமேட்டில் வீழ்வதா? பொன்னர் சங்கர் காவியங்கள் மண்அரித்துப்போவதா? கண்ணகிக்கு கடற்கரையில் நான் வைத்த சிலை விண்ணுயர முட்டும் அலைகளில் கண்மறைந்து போவதா? கழுத்தினிலே நான் அணியும் மஞ்சள் துண்டு அந்த பொழுதுனிலே நஞ்சிப்போக விடலாமோ உடன்பிறப்பே? என் செல்லக்குழந்தை அழகிரிக்கு மந்திரிப் பதவி கேட்டு தலைநகர் செல்வதற்கு உதவிய அந்த தள்ளுவண்டி வெள்ளக்காட்டிலே அடித்துக்கொண்டு செல்ல விடுவதா? தமிழினமே எழுந்து வா! கைகோர்த்து நிற்போம் கடற்கரைச்சாலையிலே மனிதச்சங்கிலியாய்! கோடானுகோடி தந்திகள் அடிப்போம் கொந்தளிக்கும் கடல்அலைக்கு கண்டனம் தெரிவித்து! மூட்டை மூட்டையாக கடிதங்கள் வரைவோம் உலகம் மூழ்கிப்போவதை தடுப்பதற்கு! தளபதி பின்னாலே அணிதிரள்வீர் தமிழர்களே!

ஜெயலலிதா

இந்தப் பேரழிவிற்கு காரணமான கருணாநிதியையும் தி.மு. மைனாரிடி அரசையும் வண்மையாகக் கண்டித்து நமது கழகத்தோழர்கள் எல்லா ஊர்களிலும் சந்துபொந்துகளிலும் வெயில் மழை பாராது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட உத்தரவிடுகிறேன். நான் மீண்டும் கொடநாடு எஸ்டேட் சென்று மேலும் ஆறு மாதங்கள் ஓய்வெடுத்து கருணாநிதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு செய்வது என்று சிந்திக்க இருக்கிறேன் என்பதனையும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாசு

இந்த சந்தர்ப்பத்திலாவது எங்களது வன்னியர் சாதியினர் வாழும் ஊர்களை தனியாகப் பிரித்து தனி தமிழ்நாடு உருவாக்கினால் நான் அந்த மாநில முதல்வராகவும் எனது மகன் அன்புமணி துணைமுதல்வராகவும் வரும் வேளையில் நாங்கள் காடுமரங்களை வெட்டித்தள்ளி நிலங்களை மேடாக்கி அதன்மேல் அமர்ந்து எங்கள் சாதியினர் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வார்கள். வாழ்க சாதிவெறி. வாழ்க தமிழ். வாழ்க இந்தியா. ஒழிக தமிழ்நாடு.

திருமாவளவன்

எரிமலைக்கு அடங்க மறுப்போம். சுனாமி அலைகளை அத்துமீறுவோம். மண்சரிவுகளிலிருந்து திமிறி எழுவோம். புயலடித்தால் திருப்பியடிப்போம். தலித்துகளுக்கென தனியான தீவு உருவாக்குவோம். வாழ்க தமிழ். ஒழிக ராஜபக்சே.

சுப்பிரமணியசாமி

2012 லே நடக்கப்போற இன்சிடென்டுக்கு எல்.டி.டி தான் காரணம். அவ்ங்களோட இந்த திட்டத்துக்கு ஹெல்ப் பண்றதா சோனியா காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா ஒபாமா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. இது சம்பந்தமா நான் அடுத்தவாரம் சீனா அதிபரையும் ரஷ்யா பிரதமரையும் சந்திக்க இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்கோ. நான் பார்த்துக்கறேன். எல்லாரும் நன்னா வாழணும்ங்கிறதுக்காக எனது கட்சிக்காரா எட்டு கோடி பேரும் கருணாநிதிக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுவா. அதுக்காக நான் பி.ஜே.பி கூட கூட்டணி சம்பந்தமா பேசிண்டு இருக்கேன். காங்கிரசு சென்ட்ரல் கவர்மெண்டை அடுத்தவாரம் கலைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

....

Monday, November 16, 2009

இன்றைய செய்திகள் (16-12-2009)

செய்தி 1:

நிஜம்:

வாரிசு அரசியலை காங்கிரஸ் எதிர்க்கும் என இ.வி.கே.எஸ் இளங்கோவன் விழா ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.

நிழல் :

இப்படி கூறியதன் மூலம் காங்கிரஸை நிரந்தர குத்தகைக்கு எடுத்திருக்கும் நேரு குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

செய்தி 2:

நிஜம்:

சாதி வாரியான கணப்பெடுப்பு உடனே நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு தெரிவித்தார்.

நிழல் :

மேலும், அரசு நடத்தும் கட்டணக் கழிவறைகளின் முன்னால் வரிசையில் நிற்பவர்களில் கூட தனது சாதியினருக்கு முன்னுரிமை அளித்து உள்ளே அனுமதிக்கவேண்டுமென வலியுறுத்தினார்.



செய்தி 3:

நிஜம் :

இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய நிதியமைச்சர் இலங்கையில் சந்தித்துப் பேசினார்.

நிழல் :

அப்போது,போரில் இலங்கைக்கு இந்தியா மிகப்பெரும் உதவிகள் செய்தும் தமிழர்கள் இன்னும் சிலரை மிச்சம் மீதி விட்டு வைத்திருப்பதற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

செய்தி 4:

நிஜம் :

தர்மபுரி "கியூ' பிராஞ்ச் அலுவலகத்தில் நேற்று அதிகாலை, போலீசார் தங்களுடைய டாடா சுமோ வாகனங்களுக்கு, ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி பூஜை செய்தனர்.



நிழல் :

மேலும் 'மாமூல்' வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க அப்பாவிப் பலியாடுகள் பெருமளவில் சிக்குவதற்கு ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டனர்.

செய்தி 5:

நிஜம் :


புத்தமதத் தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசத்தில் தனது ஒருவார பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று டில்லி திரும்பினார்.


நிழல் :

தனது பயணத்தின் மூலம் இந்தியா, சீனா இடையே சிண்டுமுடிந்திடும் வேலை மிகச்சுலபமாக முடிந்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்

செய்தி 6:

நிஜம் :

தி.மு.க.வும், காங்கிரசும் இரண்டற கலந்து லட்சிய நோக்கத்தோடு செயல்படும் கட்சிகள். இரு கட்சிகளும் கூட்டாக இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவே வளமாகவும், வலிமையாகவும் இருக்கும் : கருணாநிதி பேச்சு.


நிழல் :

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருகட்சிகளும் கூட்டாக செயல்பட்டதன் மூலம் தங்களது லட்சிய நோக்கத்தினை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

...

Saturday, November 14, 2009

எங்க ஊரு அதிசய மனிதர்கள் - பாகம்2

புகழேந்திப்பயல்

புகழேந்திக்கு சொந்த ஊரு திருவையாறு பக்கத்தில இருக்கிற திருப்பூந்துருத்தி. கி.பி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி சொச்ச வருசத்துல அவன் எட்டாவது படிச்சிகிட்டு இருந்தப்ப அந்த ஊர்ல தாதாவா இருந்த காமராசு ங்கறவனுக்குப் பயந்து கிட்டு எங்க ஊருக்கு குடும்பத்தோட அகதியா வந்து சேர்ந்தான்.

நான் படிச்சிகிட்டு இருந்த பள்ளிக்கூடத்தில என்னோட வகுப்புல வந்து சேர்ந்தான்.

வந்த புதுசுல அந்தப்பய அமுக்குனியாட்டம் ரொம்ப சாதுவாத்தான் இருந்தான்.

ஒரு வாரம் கழிச்சு தன்னோட சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சிட்டான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்கால லட்சியம் இருக்கும்.

அவனோட எதிர்கால லட்சியம் தமிழ் வாத்தியார் கபிலருக்கு பைத்தியம் பிடிக்க வெக்கணும் ங்கிறதுதான்.

" தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே காமெடி பீஸ் தான் " னு எப்பவும் அவன் சொல்லிகிட்டு இருப்பான்.

அதனால தன்னோட இலக்கா தமிழ் வாத்தியார் கபிலரை தேர்ந்தெடுத்தான்.

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னாடி கபிலருக்கு டவுசர் போட்டுகிட்டு நிக்கிற குஷ்பு படம் போட்ட பொங்கல் வாழ்த்து அட்டையை தபால்ல அனுப்பி வெச்சிட்டான்.

கொதிச்சிப்போன தமிழ் வாத்தியாரு மறுநாள் காலையில நடந்த Prayer தன்னோட கடும் கண்டனத்தை தெரிவிச்சாரு.

" எந்த ராஸ்கல் தறுதலை முட்டாப்பயலோ எனக்கு இந்த பொங்கல் வாழ்த்தை அனுப்பி வெச்சிருக்கான் பாருங்க."

ன்னு சொல்லி அந்தப்பொங்கல் வாழ்த்து அட்டைய, உலகக்கோப்பை போட்டியில ஜெயிச்ச கபில்தேவ் கோப்பையத்தூக்கி காண்பிச்சது மாதிரி எல்லாருக்கும் காண்பிச்சாரு.

அதப்பார்த்த பசங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

" இவனுக்கெல்லாம் எப்படி படிப்பு வரும். வாழ்க்கையில உருப்படறதுக்கு வாய்ப்பே இல்ல. இதப்பத்தி திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்காருன்னா......" ன்னு பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாரு.

ஒருநாளு தமிழ் இலக்கணம் பத்தி பாடம் நடத்திகிட்டு இருந்தாரு.

" 'பலப்பல' , 'சிலசில' மாதிரி பிரிஞ்சா பொருள் தர்ற வார்த்தைகள் அடுக்குத்தொடர். 'வழவழ' 'கொழகொழ' ன்னு பிரிச்சா பொருள்தராத வார்த்தைகள் இரட்டைக்கிளவிகள் ஆகும். டேய் புகழேந்தி! இரட்டைக்கிளவிகளுக்கு ஒரு உதாரணம் சொல்லு " ன்னு கேட்டாரு.

புகழேந்திப்பய பவ்யமா எழுந்திருச்சி கையை கட்டிக்கிட்டு,

" நீங்க பேசறது எல்லாமே இரட்டைக்கிளவிங்கதான் சார்."

" எப்படி சொல்ற? "

" நீங்க எப்பவுமே 'வளவள' ன்னு தேவையில்லாமத்தானே சார் பேசிகிட்டு இருக்கீங்க? "

இப்படி அவன் பதில் சொன்னதும் பசங்க எல்லாரும் 'கடகட' ன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

வாத்தியாருக்கு 'பொசபொச' ன்னு கோவம் வந்துடிச்சி.

உடனே குச்சிய எடுத்து புகழேந்திய 'படபட'ன்னு போட்டு வெளுத்து எடுத்துட்டாரு.

அடிதாங்க முடியாம அவன் 'பொலபொல' ன்னு கண்ணீர் விட ஆரம்பிச்சிட்டான்.

இப்படியா அவருக்கு பலப்பல சேட்டைகள் செஞ்சி அவரை தெனாலி படத்துல கமல் ஜெயராமை படுத்தி வெக்கிறது மாதிரி படாத பாடு படுத்தி வெச்சிகிட்டு இருந்தான்...

கொண்டு வந்து மனைப்புகுந்து
குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடை
வைத்தருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்திலாறு
சுவைத்திறத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்ய அளித்துளார்.

பெரியபுராணத்துலயோ எதுலயோ வர்ற இந்த மாதிரி வாயில நுழையாத பாட்டையெல்லாம் கூட எளிமையா மனப்பாடம் பண்ணிடுவான். ஆனா கணக்குப் பாடம் னாலே இவனுக்கு ஒவ்வாமை.

"கணக்கு எனக்குப் பிணக்கு. நினைத்தாலே கசக்கும் ஆமணக்கு" ன்னு தத்துவம் பேசுவான். ஒண்ணும் மூணும் கூட்டினா ஏழு வரும்னு சொல்லுவான். அந்த அளவுக்கு கணக்குல ரொம்ப பலவீனமானவன்.

அதனால கணக்கு வாத்தியார் வகுப்புக்கு வரும்போது மட்டும் தலைமறைவாயிடுவான்.


தொடரும்....

....

Friday, November 6, 2009

டமில் ஒழிக !




ரெட் ஜெயன்ட் முவீஸ்

சன் பிக்சர்ஸ்

காமெடி டைம்

டீலா நோ டீலா

ஹாலிவுட் டைம்

SUN TV

K TV

SUN NEWS

SUN MUSIC

JAYA TV

JAYA PLUS

JAYA MAX


செம்மொழித் தமிழை எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார்கள் பாருங்களேன்!


தமிழ் இனி மெல்லச் சாகாது.இவர்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் சீக்கிரமாகவே செத்து விடும் போலிருக்கிறது.

அய்யோ! கொலை பண்றாங்கோ!! (தமிழை) கொலை பண்றாங்கோ! கொலை! கொலை!....



...

Wednesday, November 4, 2009

பொக்கிஷம் திருடின கந்தசாமி போல் ஒருவன்


என்னத்த எழுதறதுன்னு தெரியல. எழுதாம இருக்கவும் முடியல. கொஞ்ச நாளு எழுதாம விட்டுட்டா, இந்தப்பய எங்க போய்த்தொலைஞ்சான்னு யாரும் கவலைப்படறது இல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகவே கத்திக்கிட்டு இருந்த மத்த கட்சி மந்திரிகளையெல்லாம் கழட்டி விட்டுட்டு, பாசமிகு காங்கிரஸ் மந்திரிகளை மட்டும் கூட்டிக்கிட்டு இலங்கைக்கு ஜாலி டிரிப் அடிச்சிட்டு வந்த டி.ஆர்.பாலு அண்ணன், கனிமொழி அக்கா மாதிரிதான் இந்த பதிவுலக நண்பர்களும் போலிருக்கு. என்னத்தச் சொல்ல.

நான் என்ன பொக்கிஷம் படத்துல வர்ற சேரனா? இடைவெளியே இல்லாம இடைவேளை வரைக்கும் தொடர்ந்து எழுதிகிட்டு இருக்கிறதுக்கு.

அந்தப் படத்துலதான் நாற்பது வயசு இளம் கதாநாயகன் சேரன் தன்னோட காதலிக்கு மூணு மணி நேரமா மூச்சு விடாம காதல் கடிதம் எழுதித் தள்ளிகிட்டே இருந்து, கடைசியில மூச்சை விட்டுடுவாரு. ஆனா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த அப்பாவி மக்கள் படம் ஆரம்பிச்சு அரைமணி நேரத்திலேயே வாயால மூச்சு விட ஆரம்பிச்சிட்டாங்க. அதாகப்பட்டது, குறட்டை விட ஆரம்பிச்சிட்டாங்க.

கடல்ல மூழ்கும் கப்பலை கதையா வெச்சி வெளிவந்த டைட்டானிக் படத்தைப்போலவே ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு, தயாரிப்பாளரை கடன்ல மூழ்க வெச்சிட்டாரு பாவம்.

பணக்காரனுங்க கிட்ட இருக்கிற பணத்தைப் பிடுங்கி ஏழைமக்களுக்கு வாரி வழங்குற வள்ளல்கள் பத்தி ஏற்கனவே பலபேரு படமெடுத்து அவங்க பணக்காரங்களாயிட்டாங்க. பல படங்கள்ல பயன்படுத்தப்பட்டு கந்தையாகிப் போன அந்த கதையை வெச்சி 'கந்தசாமி' ன்னு விக்ரம் நடிச்ச ஒரு படம் வந்துச்சி.

படம் எடுக்க வீடியோ காமிரா பயன்படுத்தினாங்களா இல்ல ஸ்டில் காமிராவில போட்டோ புடிச்சி வரிசையா ஒட்டவெச்சிட்டாங்களான்னு தெரியல. ஓரு நிமிசத்துல ஓராயிரம் ஃபிரேம்கள் மாறுது. அதைப் பார்த்தா கண்ணுக்குக் கீழ கருவளையம் ஏறுது.

அந்தப் படத்தைக் காசு கொடுத்து பார்த்த ஏழை அப்பாவி மக்கள் தியேட்டரில் 'நொந்தசாமி' ஆனார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

அப்புறம் 'உன்னைப்போல் ஒருவன்'ன்னு ஒரு படம்.

இந்தியில 'A Wednesday' ங்கற பெயரில வெளிவந்து வெற்றிகரமா ஓடுன படத்தை தமிழ்ல இந்தப் பேருல எடுத்திருக்காங்க.

காலையில எழுந்திருச்சி காய்கறி வாங்கப்போறேன்னு வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லிட்டு வெளியில கிளம்பி போற கதாநாயகன் கமல், ஒரு மொட்டை மாடிமேல ஏறி குத்தவெச்சி குந்திகிட்டு, ஊருக்குள்ள பல இடங்களில் வெடிகுண்டு வெச்சி இருக்கிறதா கமிசனர் மோகன்லாலுக்கு போன் பண்ணி அவருக்கு வயித்தால போவ வெக்கிறாரு.

'யோவ் என்னய்யா இப்படி சின்னப்புள்ளத்தனமா பண்ணிபுட்ட. எங்கங்க வெச்சிருக்கன்னு சொல்லுயா ங்கொய்யால.' ன்னு கமிசனரு காட்டமா கத்துறாரு.

'அதச்சொல்லணும்னா ஜெயில்ல இருக்கிற என்னோட தோஸ்துங்க நாலு பேரை வெளியில வுடுய்யா' ன்னு கமல் மிரட்டுறாரு.

'சரி. எங்கன அந்த நாதாரிப் பயலுங்கலை இட்டாந்து வுடனும்?' ன்னு கமிசனரு கேட்குறாரு.

'ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பழைய விமான தளத்துக்கு இட்டாந்து வுடு. அங்க ஒரு ஜுப் நிக்கும். அதுல ஏறி அவனுங்களை உட்கார சொல்லிட்டு திரும்பிப்பார்க்காம நீ ஓடிப்போயிடு' ன்னு கமல் சொல்றாரு.

அவரு சொன்னமாதிரியே அந்த நாலு தடிப்பயலுங்களையும் ரெண்டு போலீசு காரனுங்க தறதறன்னு இழுத்துட்டுப்போயி அந்த விமான தளத்துக்குள்ள தொறத்தி விடறாங்க. அந்த கேடிப்பயலுங்க சந்தோசமா ஓடிப்போயி அந்த ஜுப் உள்ள ஏறி உட்கார்ந்துகிட்டு பாட்டு கேட்குறதுக்காக பிளேயரை ஆன் பண்ணுறானுங்க.

உடனே பிளேயரில ' துன்பம் தொலைந்தது இப்போ' ன்னு பாட்டு கேட்குது. அடுத்த நொடி படார்னு வெடிச்சி சிதறுது.

'என்னய்யா இப்படி பண்ணிபுட்ட?. உண்மையில நீ யாருய்யா?'ன்னு கமிசனரு கமல் கிட்ட கேட்க,

கமல்
'உன்ன மாதிரித்தான்யா நானும். நீ மட்டும் உனக்குப் பிடிக்காத ரவுடிங்களை எண்கவுண்டர்ல சுட்டுத்தள்ளுறயில்ல?. ஒரு அப்பாவி மனுசன் எனக்கு மட்டும் அந்த உரிமையில்லையா? நான் என்ன இளிச்சவாயனா. போங்கய்யா. போய் புள்ளகுட்டிங்களை படிக்க வையிங்கய்யா. சும்மா பிக்காரித்தனமா பேசிகிட்டு!'

ன்னு போனை கட் பண்ணிட்டு காய்கறி மூட்டையத் தூக்கி தலையில வெச்சிகிட்டு மொட்டைமாடியை விட்டு இறங்கி வீட்டுக்கு நடையக் கட்டுறாரு.

படம் பார்த்துட்டு வெளியில வர்ற சனங்களும் 'நல்ல யோசனையா இருக்கே. நாமளும் இப்படி எங்கயாவது குண்டு வெச்சிட்டு போலீசை மிரட்டலாமா' ன்னு சிந்திச்சபடியே வீட்டுக்கு நடையக் கட்டுறாங்க.

மூக்குப்பொடி வாங்குறமாதிரி வெடிமருந்தை எப்படி கமல் சர்வசாதாரணமா வாங்குறாருன்னு தெரியல. அப்புறம் அந்த வெடிமருந்து விக்கிற கேடிப்பயலை மட்டும் ஏன் மன்னிச்சி விடறாரு. அவனையும் எண்கவுண்டர் பண்ணச் சொல்லியிருக்கலாமே?

இத மாதிரி பல சந்தேகங்கள் உங்களைப்போலவே எனக்கும் வருது. ஏன்னா நானும் 'உங்களைப் போல் ஒருவன்' தானே!

.....