Tuesday, June 30, 2009

இன்றைய செய்திகள் (30-06-2009)

செய்தி 1:

நிழல் :

பறவைகளின் மேல் அன்பும் பாசமும் கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அவர்கள் பறவைகள் பயன்படுத்துவதற்காக 1000 கோடி ருபாய் செலவில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே டாய்லெட் வசதி செய்து கொடுத்துள்ளார்.

நிஜம் :

அதாவது, உ.பி முதல்வர் மாயாவதி 1000 கோடி ருபாய் அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனது சிலைகளை நிறுவி பறவைகளின் 'பயன்'பாட்டிற்காக அவற்றைத் திறந்து வைத்தார்.



செய்தி 2:

நிஜம் :

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன், விசாரணை அறிக்கையை இன்று (30-06-2009) தாக்கல் செய்தது. 48 முறை கமிசன் தனது விசாரணை காலத்தை நீட்டித்து, 17 வருடங்களுக்குப்பிறகு அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

நிழல் :

அதைத்தொடர்ந்து, இன்னும் 170 ஆண்டுகளுக்குள் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் உயிருடனோ பிணமாகவோ ஆவியாகவோ நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.



செய்தி 3:

நிஜம் :

தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிழல் :

தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு விமானங்களிலும் போர்க் கப்பலிலும் போர் நடந்த சமயத்தில் அனுப்பிய ஏராளமான நிவாரண 'பொருட்களை' இலங்கை ராணுவம் சரிவர பயன்படுத்தாததாலேயே மீதம் இத்தனை லட்சம் தமிழர்கள் தப்பிப் பிழைத்து விட்டதாகவும், இந்தியாவினால் கொடுக்கப்பட்ட பயிற்சிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது அகதிகள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

அதே நேரத்தில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து கொடுத்துவரும் 'விருந்து உபசாரங்களுக்காக' அந்நாட்டு அதிபர் ராசபக்சேவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.



செய்தி 4:

நிஜம் :

சென்னை மாநகராட்சியிலுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் இனிமேல் கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டால் மாநகராட்சி மன்றத்தையே கலைத்துவிடுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

நிழல் :

அல்லது, தவறு செய்யும் தி.மு.க கவுன்சிலர்களின் பதவிகளைப் பறித்து அந்தப்பதவிகளை தனது பேரன் பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன்களுக்கு கொடுப்பதற்கான சட்டம் ஒன்றினை இயற்ற முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



செய்தி 5:

நிஜம்:

தீவிரவாதிகளுடன் இனி பேச்சு வார்த்தை நடத்தப்போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் கிலானி தெரிவித்தார்.

நிழல் :

இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் பணியினை தீவிரவாதிகள் சரிவர மேற்கொள்ளவில்லை எனவும் அதன் காரணமாகவே அவர்கள் மீது தான் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டினார்.


.

Friday, June 26, 2009

போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!






பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் கல்யாணம் ங்கற வார்த்தையைக் கேட்டாலே 'உவ்வே' ன்னு எதுக்கு குமட்டிக்கிட்டு வாந்தி எடுத்தார்னு ஒருநாள் மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து சிந்தனை பண்ணிப்பார்த்தேன்.

கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு இந்த கெழங்கட்டையெல்லாம் அடிக்கடி சொல்லுதுங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவனோட நெலமையோ ஒரு வாரத்து தயிர் மாதிரி ரொம்ப நாறிப்போயிடுதுங்க.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் மாதிரி கலகலப்பாய் போய்க்கிட்டு இருக்கிற பிரம்மச்சாரியோட வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்புறம் மெகாதொடர் சீரியல் மாதிரி ஒரே சோகமாயிடுதுங்க.

'வீட்டைக் கட்டிப்பாரு. கல்யாணம் பண்ணிப்பாரு.' ன்ற பழமொழியை அனுபவிச்சி முதல்ல சொன்னவன் என்ன பாடுபட்டிருப்பான்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை சடங்கு, சம்பிரதாயம்!

முதல்ல பொண்ணு தேடுற படலம்.

கேசரி,ஜாங்கிரி இப்படிப்பட்ட இனிப்புப் பண்டங்களுக்கு அடிமையான பசங்களை நண்பனா கூட்டிக்கிட்டு பொண்ணு பார்க்கப்போறவன் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண முடியாது. பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சிப்போயி இருந்தாலும் பொண்ணு தேடுற படலம் முடிஞ்சு போயிடுச்சின்னா அப்புறம் திங்கிறதுக்கு சுவீட் கிடைக்காதேங்கற பதட்டத்துல ஏதாவது குறையைக் கிளப்பி விட்டுட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு 'அப்புறம் சொல்லி அனுப்புறோம்' னு கிளம்ப வெச்சிடுவானுங்க.

பொண்ணு நல்லா லட்சணமா இருந்தாலும் அடுத்தபடியா திங்கறதுக்கு பட்சணம் கிடைக்காதேங்கற எண்ணத்துல மாப்பிள்ளைக்காரப் பயல் கிட்ட 'டேய்! பொண்ணோட மூக்கு அருவா மாதிரி வளைஞ்சு இருக்குடா' ன்னு உசுப்பேத்தி விட்டுட்டு அந்த பொண்ணை பிடிக்கலன்னு சொல்ல வெச்சிடுவானுங்க.

சுவீட் முட்டை போடுற வாத்தை யாராவது கொல்ல நினைப்பாங்களா?.

இப்படி அடுத்தவனுக்குப் பொண்ணு பார்க்கப் போயே தன்னோட சுவீட் தாகத்தை தீர்த்துக்குவானுங்க.

ஒருவழியா நண்பர்களோட சதித்திட்டங்களையும் முறியடிச்சிட்டு பொண்ணு புடிச்சிப்போயிடுச்சின்னா அடுத்ததா நிச்சயதார்த்தம்னு ஒண்ணு பண்ணுவாங்க.

தட்டுல பழம், வெத்தலை பாக்கு இதெல்லாம் வெச்சி பொண்ணோட அப்பனும் மாப்பிளையோட அப்பனும் மாத்தி மாத்தி கொடுத்துக்குவானுங்க. என்னய்யா விளையாடறீங்களா?

அவங்க அவங்க வாங்குன ஆரஞ்சுப் பழத்தை அவனவன் உரிச்சித் தின்னுக்க வேண்டியதுதானே? எதுக்கு வாங்குன பழத்தை மாத்தி மாத்தி கொடுத்துக்கணும்?. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

நிச்சயதார்த்தமும் முடிஞ்சி அப்புறம் கண்ணாலம்.

கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி மாப்பிள்ளை நேரா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பியூட்டி பார்லருக்குப்போயி ஷேவ் பண்ணி முடி வெட்டிக்குவான். பியூட்டி பார்லர் காரன் மாப்பிள்ளை கிட்ட 'ஃபேசியல் பண்ணிக்குங்க. அப்பத்தான் நாளைக்கு மூஞ்சி பளபளன்னு இருக்கும்' னு சொல்லி உசுப்பேத்தி விடுவான். கருவாப் பயலாட்டம் இருக்கிற நம்ம மாப்பிள்ளைப் பயலோட மூஞ்சியில சேறு மாதிரி எதையோ குழப்பி அப்பிவிட்டு காய வைப்பான்.காய்ஞ்சுகிட்டு இருக்கிற அந்த கொஞ்ச நேரத்துல நம்ம மாப்பிள்ளைப்பய கண்ணை மூடிக்கிட்டு கற்பனையில காஷ்மீர் மாதிரி குளுகுளு பிரதேசத்துக்கு பறந்துபோயி அந்த பொண்ணு கூட ஒரு குத்தாட்டம் போட்டு முடிச்சிடுவான். அரை மணிநேரம் கழிச்சி மூஞ்சிய கழுவிப்பார்த்தா கரிச்சட்டியில சுண்ணாம்பு அடிச்சது மாதிரி மூஞ்சி வெள்ளையா இருக்கும்.

கல்யாணப்பொண்ணு என்ன பண்ணுவா தெரியுமா? அவளோட வீட்டுக்கொல்லைப்புறத்தில இருந்த மருதாணி மரத்துல உள்ள எல்லா இலையையும் உருவிப்போட்டு அம்மியில வெச்சி அரைச்சு கை கால் விரல்ல எல்லாம் சாணி அப்புன மாதிரி அப்பிகிட்டு 'அன்னக்கிளி உன்னத்தேடுது' ன்னு டூயட் பாடிக்கிட்டு தூங்காம விடிய விடிய உக்கார்ந்து கெடக்கும்.

மறுநாள் கல்யாணம்...

விடிஞ்சதும் கல்யாண மண்டபத்துக்கு சொந்தக்காரனுங்க ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவானுங்க.

ரொம்ப தூரத்திலே இருந்து வந்த ஆளுங்க அதது ஒரு மூலையில உட்கார்ந்துகிட்டு தூங்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அந்த நேரத்துல மண்டபத்துக்கு வந்து சேரும் வித்துவானுங்க வாயில நாதஸ்வரத்தை வெச்சி ஊதி, ரெண்டு கையாலயும் தவிலை அடிச்சி தூங்கிகிட்டு இருக்கிற கூட்டத்தையெல்லாம் எழுப்பி விட்ருவாய்ங்க. வாரிச்சுருட்டிகிட்டு எழுந்திருக்கிற சொந்தக்காரனுங்க வாயில வெத்தல சீவல் போட்டுகிட்டு கல்யாணத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவானுங்க.

அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய வரவழைச்சி இந்த அய்யரு அவங்க ரெண்டு பேரையும் செக்குமாடு மாதிரி மணமேடையை சுத்தி வரச்சொல்லி டயர்டாக்கிடுவாரு.அப்புறம் பொண்ணு மாப்பிள்ளைய மணமேடையில உட்கார வைப்பாங்க. அய்யரு எதிரில இருக்கிற அடுப்பை பற்ற வெச்சி காய்ஞ்ச குச்சியெல்லாம் அதுல பொறுக்கிப்போட்டு புகைமூட்டத்தைக் கிளப்பி விடுவாரு.

அடுப்பு அனல் பட்டு வியர்வையில மாப்பிள்ளை பொண்ணோட மேக்கப் எல்லாம் கலைஞ்சி போய் ரெண்டுபேரும் வெயில் நேரத்துல மணல் திட்டுல சிக்குன அகதிகள் மாதிரி ஆயிடுவாங்க.

புகை மூட்டம் கிளம்பி அய்யரோட மூக்குக்குள்ள போயி தும்மலை கௌப்பி விடும். தும்மினா சுத்தி உட்கார்ந்து இருக்கிறவனுங்க கொந்தளிச்சிடுவானுங்கங்கற பதட்டத்துல அய்யரு 'கெட்டி மேளம். கெட்டி மேளம்'ன்னு கத்தி வித்துவான்களை உசுப்பி விட்ருவாரு. வித்துவானுங்களும் தடார் புடார் னு அடிச்சி இன்னும் அதிகமா சத்தத்தை கௌப்புவாய்ங்க. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திகிட்டு அய்யரு வாய்க்குள்ள லாக் ஆன தும்மலை யாருக்கும் தெரியாம ரிலீஸ் பண்ணி விட்ருவாரு.

மாப்பிள்ளை தாலியை எடுத்து பொண்ணு கழுத்துல ஒரு முடிச்சி போடுவான். ஆசையா அடுத்த முடிச்சி போடறதுக்குள்ள சுத்தி நிக்கிற சொந்தக்கார பொம்பளைங்க அவனோட கையிலேயிருந்து தாலியை வெடுக்குன்னு பிடுங்கி அவங்களே மீதி ரெண்டு முடிச்சையும் போட்டுவிட்ருவாங்க.

அந்த உச்சகட்ட நேரத்துல ஃபோட்டோகிராபரு மல்லாக்கப் படுத்துகிட்டும், தலைகீழா தொங்கிகிட்டும் பல ஆங்கிள் ல போட்டோக்கள் எடுத்துத்தள்ளுவான்.

உடனே சுத்தி இருக்கிற ஜனங்கள் எல்லாம் தன்னோட கையில இருக்கிற அரிசியை மாப்பிள்ளை, பொண்ணோட மூஞ்சியில வேகமா தூக்கி எறிஞ்சி ஆசிர்வாதம் பண்ணுவாங்க. தூக்கி எறிஞ்ச அரிசியில முக்கால்வாசி அந்த அய்யரோட உச்சந் தலையில போய் உட்கார்ந்துக்கும்.

ஆசிர்வாதம் பண்ணுன கையோட உடனே எழுந்திருச்சி ஜனங்கள் எல்லாம் பந்தி நடக்கிற இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுடும்.

மாப்பிள்ளையும் பொண்ணும் டயர்டாயி போய் 'உஷ். அப்பாடா' ன்னு மணமேடையில உட்காருவாங்க. அந்த நேரத்துலதான் நண்பனுங்க எல்லாம் அட்டைப்பெட்டி மேல கலர் பேப்பரை சுத்திகிட்டு வந்து 'மச்சி வாழ்த்துக்கள் டா' ன்னு சொல்லி, மாப்பிள்ளை பொண்ணை எழுப்பிவிட்டு, கையில கிப்ட் கொடுத்துட்டு 32 பல்லும் தெரியறமாதிரி சிரிச்சிகிட்டு குரூப் போட்டோ எடுத்துக்குவானுங்க.

கொஞ்சநேரத்துல சொந்தக்காரனுங்க எல்லாம் பந்தியில குந்தி தின்னு முடிச்சிட்டு மொய் எழுதிட்டு சொந்த ஊருக்குக் கௌம்பிடுவானுங்க.

தனியா உட்காரந்து கிடக்கிற பொண்ணு மாப்பிள்ளைக்கு பசியெடுக்க ஆரம்பிச்சிடும். ரெண்டுபேரும் பந்தி நடக்குற இடத்தையே ஏக்கமா அடிக்கடி எட்டிப் பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கும்.

சாயங்காலம் நாலு மணிக்கு வந்து யாராவது ரெண்டுபேரையும் பந்திக்கு கூட்டிகிட்டுப்போய் மிச்சம் மீதி இருக்கிறதை இலையில வெச்சி சாப்பிட வெப்பாங்க.

அப்புறம் எல்லாரும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாய்ங்க.

அப்புறம் கொஞ்சநாளு மாப்பிள்ளையும் பொண்ணும் குஜாலா கூத்தடிச்சி கொண்டாடுவாங்க.

மோகம் முப்பது நாளு. ஆசை அறுபது நாளு. மொத்தம் தொண்ணுறு நாளு கழிச்சி ரெண்டுபேரும் சம்பாதிச்சி குடும்பம் நடத்த திண்டாடுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி குழந்தை குட்டிகள். அப்புறம் அதை வளர்த்து... படிக்க வெச்சி... கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு வரன் தேடி அலைவாங்க..

முதல்ல பொண்ணு பார்க்கிற படலம்...

அய்யய்யோ. தேய்ஞ்சி போன சி.டி மாதிரி திரும்பவும் மொதல்லே இருந்தா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்........

Wednesday, June 24, 2009

32 கேள்விகள்

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்னோட பேரு மணிகண்டனுங்க. நேரா பாக்குறப்ப மணிசார் மணிசார்னு மரியாதையா கூப்புடுவாங்க. கொஞ்சம் அப்படி இப்படி நவுந்து போனா 'இந்த மணிப்பய இருக்கானே...அவன்...' ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. எதுக்கு வம்புன்னு எனக்கு நானே மணிப்பயல்னு பேர மாத்தி வெச்சிகிட்டேன்.புடிக்கலன்னா என்ன பண்ண போறீங்க? ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வெச்சி கூப்பிடுவீங்க. எதுக்குங்க வம்பு?


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பக்கத்து வீட்டுத் தாத்தா செத்துப்போனப்ப கிழவியைக் கட்டிப்புடிச்சி கிட்டு அழுதேன். (அழுதாத்தான் திங்கறதுக்கு பலகாரம் கொடுப்பாங்களாம்ல?). கருமம் அந்த தேதியெல்லாமா ஞாபகம் வெச்சுக்க முடியும்?


3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஆனா என்ன எழுதினேன்னு எழுதினதுக்கப்புறம் எனக்கே புரியாது.


4.பிடித்த மதிய உணவு என்ன?

ஓசியில் கிடைத்தால் பிரியாணி. காசுக்கு சாப்பிட்டால் தயிர்சாதம்.


5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

இந்தக்கேள்விக்கு உண்மையைச்சொன்னா அப்புறம் யாராவது என்னோட நட்பு வெச்சுக்குவாங்களா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதல்ல குளிக்கப் பிடிச்சாத்தானே அப்புறம் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்?.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முன்னப் பின்ன அறிமுகம் இல்லாத ஆளை எதுக்குங்க கவனிக்கனும்?


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

அது தெரிஞ்சிருந்தாதான் வாழ்க்கையில இந்நேரம் நான் உருப்பட்டு இருப்பேனே.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?


எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க. இப்போதைக்கு என்னோட சரிபாதி என்னோட ஆடைகள்தான்( ஏன்னா ஆள் பாதி. ஆடை பாதி இல்லையா?)

துவைச்சி இருந்தா போட்டுக்க பிடிக்கும்.
அழுக்கான அப்புறம் துவைக்கப்பிடிக்காது.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

சொல்ல மாட்டேன். எனக்கு வெக்கம் வெக்கமா வருது.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

புதுசா வாங்குனப்ப வெள்ளைக் கலர்ல இருந்தது. இப்ப என்ன கலர்ல இருக்குன்னு தெரியலையே.(சட்டையை துவைச்சாதான் ஒரிஜினல் கலர் தெரியும் னு சொல்றாங்களே.அப்படியா?)


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?


பக்கத்து வீட்டுக் கிழவி நாராசமாப் பாடிக்கிட்டு இருக்கிற பழைய 'காத்தவராயன்' சினிமாப்பாட்டு.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்போற பேப்பரோட நிறத்தைப் பொறுத்தது.


14.பிடித்த மணம்?

சம்மணம்.(சும்மா குந்தி கிடக்கத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்).


15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

என்கிட்ட கடன் வாங்கிட்டு குடுக்காம டிமிக்கி குடுத்துகிட்டு இருக்கிற எல்லாப்பயலுங்களையும் அழைக்கப்போறேன். அழைக்கக்காரணமா? தூக்கிப்போட்டு மிதிக்கிறதுக்குத்தான். அவனுங்களை எனக்குப் பிடிக்குதோ இல்லையோ.நான்தான் அவனுங்களை துரத்தி துரத்தி பிடிக்கணும்.


16.பிடித்த விளையாட்டு?

தூங்குற விளையாட்டு

17.கண்ணாடி அணிபவரா?

பைக் ல போறப்ப மட்டும் கருப்பு கண்ணாடி அணிவேன்.


18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எனக்குப்பிடிச்சது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படங்கள் மட்டும்தான்.


19.கடைசியாகப் பார்த்த படம்?

பர்ஸ்ல இருக்கிற என்னோட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.


20.பிடித்த பருவ காலம் எது?

கோடைக்காலத்துல குளிர்காலம் பிடிக்கும். குளிர்காலத்துல கோடைக்காலம் பிடிக்கும்.


21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் கொட்டாவி விடுறதுக்தே அலுப்பு படுவேன். படத்தை மாற்றினதே இல்லை. ரொம்ப அலுப்பா இருக்குங்க.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் – இட்லி குக்கர் சத்தம்.
பிடிக்காத சத்தம் – 'இட்லி தீர்ந்துப்போச்சுடா' என்கிற அம்மாவின் சத்தம்.

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கல்லூரியில படிக்கிறப்ப டெல்லி போய்ட்டு வந்தேன். போறப்ப அளக்குறதுக்கு டேப் எடுத்திட்டு போகலையே.அதனால எவ்ளோ தொலைவுன்னு தெரியலங்க.


24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எனக்கு எந்த தனித்திறமையும் கிடையாது. கூட்டுத்திறமையும் கிடையாதுங்க.


25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னோட வலைப்பதிவைப்படிச்சிட்டு உம் முன்னு மூஞ்சியை வெச்சி இருக்கிறதை.


26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது பாட்டுக்கு பேசாம தூங்கி கிட்டு இருக்கு. அதைப்போய் ஏங்க தட்டி எழுப்பறீங்க?


27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மனுசப்பயலுங்க காலடி படாத காடு மலை அத்தனையும்.


28.எப்படி இருக்கணும்னு ஆசை?

'நான் கடவுள்' மாதிரி இருக்கணும்னு ஆசை.


29. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கல்யாணம்தான்.


30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வுங்கறது ஒரு வால்வு மாதிரிங்க. தொறந்து இருந்தா வாழலாம். அடைச்சிகிட்டா போய் சேர வேண்டியதுதான்.


31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


http://vidhoosh.blogspot.com/

எனக்கு அவங்க வலைப்பதிவிலேயே மிகவும் பிடிச்சது 'பக்கோடா பேப்பர்கள்....' ங்கற வலைப்பதிவோட தலைப்புல முதல் பாதிதான்.
(திங்கற சமாச்சாரமாச்சே.அதான். ஹி. ஹி).


32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?

'போலி சாமியார் ஆவது எப்படி?' ங்கற புத்தகம்.
(சீக்கிரமா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்.)

விகடனில் வழுக்கி விழுந்தேன்!




'வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!'

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 24-06-2009 புதன்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!

http://youthful.vikatan.com/youth/manipayalwit230609.asp

Monday, June 22, 2009

வாழ்க்கையிலே வழுக்கி விழுவோம்!


'வாழ்க்கையில வழுக்கி விழுந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுக்கப்போறேன்' என்றான் என் நண்பன் சக்கரை. (எத்தனை ''?).

'ஏண்டா. வாழ்க்கையில எல்லாருமே எப்பவாவது வழுக்கி விழுறது சகஜம் தானேடா. காலையில கூட நான் தின்னுட்டு தூக்கிப்போட்ட வாழைப்பழத்து தோலுல காலை வெச்சி நானே வழுக்கி விழுந்துட்டேன். வழுக்கி விழுறது ஒரு குத்தமாடா.?' என்றேன் சக்கரையிடம்.

என்னைப்பொறுத்தவரை வழுக்கி விழுவதைக்காட்டிலும் மகிழ்ச்சியான ஒரு விசயம் இந்த உலகத்தில் வேறு கிடையாதுங்க.

ஒருநாள், பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக அனைவரும் பேருந்தை எதிர்பார்த்து மிகவும் பதட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சிலர் வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிய சோகத்தில் இருந்தனர். இன்னும் சிலர் தாமதமானால் 'வள்'லென்று குறைக்கும் மேனேஜர் பற்றிய பயத்தில் நின்று கொண்டிருந்தனர். ஒரு சில வாலிப வயோதிக கிழட்டு அம்மணிகள் தான் போட்ட மேக்கப் வியர்வையில் கலைந்து எங்கே தனது உண்மையான வயதை அடையாளம் காட்டிவிடுமோ என்ற அச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இப்படி அனைவரும் பதட்டத்துடனும் சோகத்துடனும் நின்றுகொண்டிருந்த போது பேருந்து வந்து நின்றது. பயணிகள் அனைவரும் சோக களையுடன் பேருந்தில் ஏற ஆரம்பித்தனர்.
பேருந்து புறப்பட ஆரம்பித்ததும் ஒரு கல்லூரி மாணவன் ஓடி வந்து ஏறுவதற்காக பேருந்தை துரத்தி வந்தான். அப்போது கீழே கிடந்த தர்பூசணி பழத்தில் கால் வைத்து விட்டான். சாலையில் வழுக்கிக்கொண்டே ஸ்கேட்டிங் பயணம் செய்து பேருந்து செல்வதற்கு முன்பாகவே அடுத்த பேருந்து நிறுத்தத்தை அடைந்து அங்கு நடுசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தில் மோதி முகத்தில் ரத்தஆறு வழிய கீழே விழுந்தான்.

இதைப்பார்த்த பேருந்து பயணிகள் அனைவரும் தங்கள் சோகத்தினை மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஏன் இப்படி ஒருவர் வழுக்கி விழும்போது அதைப்பார்க்கும் அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அப்படி வழுக்கி விழும் நபர் எழுந்து நின்று தனக்கு எங்கே அடிபட்டது என்று பார்க்காமல் தன்னை யாராவது பார்த்து விட்டார்களா என்ற பயத்தில் சுற்றும் முற்றும் ஏன் பதட்டத்துடன் பார்க்கிறார் என்பதும் எனக்குப் புரிய வில்லை.

உண்மையில் வழுக்கி விழுந்ததற்காக அந்த நபர் முதலில் பெருமைப்பட வேண்டும்.

ஏனெனில் ஒருவர் வழுக்கி விழும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் அனைவரையும் சோகத்தினை மறந்து சிரிக்க வைத்து விடுகிறார். ஆனால் உள்காயமாக அடி பட்டதினால் அவர் சோகமாகி விடுகின்றார். எனவே சுற்றியிருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்த அவருக்கு சிரித்த அனைவரும் சேர்ந்து ஏதாவது ஆறுதல் பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.


வழுக்கி விழுவதினால் ஏற்படும் பயன்கள்:


1.சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுகிறோம்.

2.ஓசியில் சோடா கிடைக்க வாய்ப்பு உண்டு.

3.அதுவரை நம்மை ஏறெடுத்தும் பார்க்காத ஃபிகரும் நம்மை திரும்பிப்பார்த்து சிரிப்பாள்.

4.'பார்த்து நடக்கக் கூடாதா?' என்ற பெருசுகளின் இலவச ஆலோசனைகள் கிடைக்கும்.

5.கதகளி மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களை நடுரோட்டில் ஆடி பழகுகிறோம்.



வழுக்கி விழ பயன்படும் பொருட்கள்:

1. வாழைப்பழத் தோல்.
2. தர்ப்பூசணி (அரைத் துண்டு).
3. சேறு.
4. தடைக்கற்கள்.
5. புல்.


வழுக்கி விழுவதில் பலவகைகள் உண்டு.அவையாவன:

1.மல்லாக்க வழுக்கி விழுதல்
2.குப்புற விழுதல்
3.ஒருக்களித்து விழுதல்


1.மல்லாக்க வழுக்கி விழுதல்

இவ்வகை பெரும்பாலும் வாழைப்பழத்தோலினாலேயே நிகழ்த்தப்படுகிறது.
வாழைப்பழத்தில் கால் வைத்தவுடன் ஸ்கேட்டிங் பயணத்தினை தொடங்கும் நபர் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வண்டியில்(தோலில்) பெட்ரோல்(வழுவழப்பு) தீர்ந்து விடும் சமயத்தில் தனது பயணத்தினை நிறுத்திவிட்டு மல்லாக்க சாய்ந்து தரையில் விழுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவார்.


2.குப்புற விழுதல்

இவ்வகை பெரும்பாலும் தடைக்கற்களினாலும் உடல் மெலிந்தவர்களுக்கு புற்களினாலும் ஏற்படுகின்றது. அதனாலேயே ஈர்க்குச்சி போன்ற உடல் மெலிந்து காணப்படுபரை 'புல் தடுக்கி பயில்வான்' என நாம் அழைக்கிறோம். அதாவது புல் தடுக்கினாலே கீழே விழுந்து விடும் அளவிற்கு உடல் பலவீனமானவர் என்பது பொருளாகும்.

இவ்வகையில் வழுக்கிவிழும் நபர் ரிவர்ஸ் கியரில் சிறிது தூரம் பின்னோக்கி பயணம் செய்த பின்னரே கீழே விழுந்து தனது இலக்கை அடைகிறார்.


3.ஒருக்களித்து விழுதல்

இவ்வகையானது மது போதைகளினால் ஏற்படுகிறது. இவ்வகையில் வழுக்கி விழுபவர் காலைத்தடுக்கி விழச் செய்வதற்கு எந்தவகை பொருளும் கீழே கிடக்கா விட்டாலும் தனது சொந்தமுயற்சியினாலேயே ஒருக்களித்து விழுந்து ஓய்வெடுக்க தொடங்குகிறார்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்ததாக வழுக்கல் எனும் செயல் திகழ்கிறது.

எனவே,

வாழ்க்கையில் வழுக்கி விழுவோம்! அதைப் பார்ப்பவர் மகிழ்ச்சி அடைவோம்!!


வெளியிடுவோர்:

வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் நலச்சங்கம்.


பின்குறிப்பு:

இவ்வாறாக வாழ்க்கையில் வழுக்கி விழுந்து மற்றவர்களை மகிழ வைத்த எமது சங்கத்தின் உறுப்பினர் பலர் மூக்கு உடைந்தும் பற்கள் விழுந்தும் கைகால்களில் மாவுக்கட்டுப்போட்ட படியும் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் ஓய்வெடுத்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் செலவிற்கும் நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, June 17, 2009

கிழமொழிகளும் மணிப்பயலின் மறுமொழிகளும்

•ஆற்றுல போட்டாலும் அளந்து போடு

சட்டையை இன் பண்ணினா மறக்காம ஜிப்பு போடு.


•ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

ஏட்டு வாங்கிய மாமுல் வீட்டுக்கு உதவாது.(நேரா பிரியாணி கடைக்குத்தானே போவாரு.)


•ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.

ஆபரேட் பண்ண தெரியாதவன் கம்ப்யூட்டர்ல வைரஸ் னு சொன்னானாம்.


•குரைக்கிற நாய் கடிக்காது

கடிக்கிற நாய் குறைக்காது.(வாயால கவ்விகிட்டு இருக்கறப்ப எப்படிய்யா குரைக்க முடியும்?)



•இடுக்கண் வருங்கால் நகுக

கடன்காரன் வந்தால் ஓடுக.


•ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

வீடு ரெண்டு பட்டால் வக்கீலுக்குக் கொண்டாட்டம்.


•காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

A.T.M க்குள்ள நிற்கும்போதே ஏ.சி காற்று வாங்கிக்கொள்.


•ஆழமறியாமல் காலை விடாதே.

ஓசியிலே கொடுக்கிறானேன்னு Credit Card வாங்காதே.


•குடிக்கிறது கூழ் கொப்புளிகிறது பன்னீர்.

மாத சம்பளம் ஆயிரத்து அய்நூறு. டூர் போக நினைச்சானாம் சிங்கப்பூரு.


அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

Missed Call ஐ Dial பண்ணிப்பார்த்தால் அத்தனையும் Wrong Call.


ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆம்பள கறுத்தால் கிடைக்காது பெண்.


கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஜலதோசம் பிடித்தவனுக்குத் தெரியுமா கூவம் வாசனை?

Friday, June 12, 2009

கவிதைகள்

ராசிக்கல்

கோடீஸ்வரன் ஆக ஆசைப்பட்டு

அணிந்துகொண்டேன் ராசிக்கல்லை. - இப்போது

கோடம்பாக்கம் ஓட்டலிலே

கழுவுகின்றேன் தோசைக்கல்லை.


வாஸ்து

வாஸ்து பார்த்து வீடு கட்டி

வாசலிலே பந்தல் வெச்சேன்.

தோஸ்து ஒருத்தன் ஏமாற்றி

நடுத்தெருவில் குந்த வெச்சான்.


காத்திருந்து காத்திருந்து....

உனக்காக காத்திருந்தேன்

சுங்குவார் சத்திரத்தில்...

பலநாளாக!


உங்கப்பன் என்னைப் பிடித்து

தொங்கவிட்டான் உத்திரத்தில்...

தலைகீழாக!



கல்லூரிக் காதல்

உன் கூந்தல் மேகம் கண்டு

ஆடும் மயிலானேன்.

உனது வீட்டுத்தோட்டத்தில்

கூவும் குயிலானேன்.

உனையே நினைத்து படிக்காமல்

பரிட்சையிலே பெயிலானேன்.

Thursday, June 4, 2009

போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகளும் போலிச்சீடர்களும்


மணிப்பயல் சுவாமிகள் தன்னைக்காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக போளி கொடுப்பது வழக்கம். தேம்பி அழும் பக்தர்களுக்கு தேங்காய் போளியை வாயில் திணித்து தேற்றி விடுவார். பணக்கட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு பருப்பு போளியை பொட்டலம் போட்டு பாசமுடன் அளிப்பார். வெறுங்கையுடன் வரும் வெட்டிப்பக்தர்களின் வாயில் விபுதியை அள்ளித் தெளிப்பார்.

அதன் காரணமாக அவரிடம் போளி வாங்கி தின்று ருசி கண்ட பக்தகோடிகளால் போளிச்சாமியார் என்ற பெயரில் அன்புடன் அழைக்கப்பட்டார்.

போளிச்சாமியார் மணிப்பயல் சுவாமிகள் நீண்ட தாடியுடனும் சாமியார்களின் பொதுவான யூனிஃபார்ம் ஆன காவி உடையுடனும் கையில் கமண்டலத்துடனும் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

கமண்டலத்தில் இருக்கும் பொருளானது கால நிலைக்கேற்ப மாறுபடும். அதாவது குளிர் மற்றும் மழைக்காலங்களில் சூடான காபியும் கோடைக்காலத்தில் குளிர்பானங்களும் அதில் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சிறிது வாயில் கவிழ்த்துக்கொண்டு தாகசாந்தி அடைவார்.

அவ்வப்போது அவர் தரும் போளிகளுக்காகவும் கமண்டலத்தில் இருக்கும் காபிக்காகவும் அடிமையான சிலர் அவருக்கு சீடர்களாக மாறி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்து காலம் தள்ளினர்.

……தொடரும்……

Tuesday, June 2, 2009

விகடனில் எனது படைப்பு

‘தொந்தியின் பயன்கள் : ஓர் ஆய்வு கட்டுரை’

என்ற தலைப்பில் என்னுடைய படைப்பு விகடன்.காம் – ல் 27-05-2009 புதன்கிழமை அன்று வெளிவந்துள்ளது.

விகடனுக்கு நன்றி!


http://youthful.vikatan.com/youth/manipayalstory27052009.asp

மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார்


'ராஜாதி ராஜ! ராஜ மார்த்தாண்ட! ராஜகம்பீர! மக்குநாட்டு மன்னர் மணிப்பயலார் வருகிறார்! பராக்! பராக்! பான் பராக்!'

குத்தீட்டியை செங்குத்தாக பிடித்தபடி அமைச்சரவையின் வாயிலில் நின்ற காவலாளி அடி வயிற்றிலிருந்து அலறினான்.

மன்னர் மணிபயலார் கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

'மந்திரி குண்டுசவுரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?'

'மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ தெரியாது மன்னா. ஆனால் மக்கள் உங்கள் மீது வசைமாரி பொழிகின்றனர்'

'நீர் என்ன சொல்கிறீர் அமைச்சரே?'

'ஆம் மன்னா! நான் நகரில் வலம் வந்துகொண்டிருந்தபோது நாய்கள் துரத்தியதால் ஒரு குடிசை வீட்டின் ஓரமாக ஒளிந்துகொண்டிருந்தபோது ஒட்டுகேட்டேன். நாட்டில் மழைபொழிகிறதா இல்லையா என்பது கூட தெரியாமல் மன்னர் என்ன அரண்மனையில் அமர்ந்து கொண்டு மகாராணியாருக்கு மாவு ஆட்டி கொடுத்து கொண்டு இருக்கிறாரா? என்று குடிசைக்குள் குந்தி இருந்த சிலர் தங்களை ஏளனமாக எள்ளி நகையாடினர் மன்னா.'

'மக்களை விட்டுதொலையும் மந்திரியாரே! அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் விடு. அந்தப்புரத்தில் அழகிகள் அனைவரும் நலம்தானே?'

'மன்னர் மன்னா! தாங்கள் அரண்மனையின் அறைகளில் ஒட்டடை அடிப்பது, அரசியாரின் துணிமணிகளை அள்ளிப்போட்டு துவைப்பது போன்ற சொந்த வேலைகள் செய்து சோர்வடைந்து போவதால் அந்தப்புரம் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டது. அங்கே அந்தப்புரத்து அழகிகள் எல்லாம் அதரப்பழசான கிழவிகள் ஆகிவிட்டனர். உறைக்குள்ளேயே கிடந்து துருப்பிடித்த தங்களது உடைவாள் போல அறைக்குள்ளேயே அடைந்துகிடந்து நரைபிடித்த தலையுடன் நடமாடுகிறார்கள் மன்னா. பேரன் பேத்திகளை கொஞ்ச வேண்டிய வயதில் ஃபேரன் லவ்லி எனும் ஒரு பசையை முகத்தில் பூசிக்கொண்டு கேரம் விளையாடி நேரம் போக்குகின்றனர்.கட்டையில் போக வேண்டிய வயதில் மட்டைப்பந்து விளையாடி கொட்டமடிக்கின்றனர். முகடுகள் போல் கூன்விழுந்த முதுகுடன் இருந்துகொண்டு உதடுகளில் சாயம் பூசி உலா வருகின்றனர் மன்னா.'

'அப்படியா? வியப்பாக உள்ளதே! அப்படியானால் அவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் வீட்டிற்கு அனுப்பிவிடு. போக மறுத்து அடம்பிடிக்கும் பொக்கைவாய் கிழவிகளை அப்படியே அலாக்காக அலுங்காமல் தூக்கிக்கொண்டுபோய் இடுகாட்டில் குழிதோண்டி இன்றே புதைத்துவிடு.'


*************************************************************************************

“பாரி, ஓரி, காரி, அதியன், ஆய், நள்ளி, பேகன் ஆகிய கடையெழு வள்ளல்கள் போல நானும் ஏதாவது வாரி வழங்கி எட்டாவது வள்ளலாக எனது பெயரும் வரலாற்றில் இடம்பெற உள்ளம் கிடந்து துடிக்கிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவியுங்கள் அமைச்சர் பெருமக்களே!”

“வள்ளலாக ஆவது பற்றி அப்புறம் யோசிக்கலாம். முதலில் எங்களது மூன்று மாத சம்பள பாக்கியை முழுமையாக கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் மன்னா”

*************************************************************************************

'தளபதி உருண்டை உப்பிலியாரே! நமது நாட்டின் எல்லையோரத்தில் நேற்றிரவு முதல் கூடாரம் அடித்து தங்கியிருக்கும் நாடோடிகள் பெரிய பெரிய இரும்புக் குழாய்களை தங்களோடு கொண்டு வந்துள்ளனரே! அதில் புட்டு சுட்டு நமது நாட்டில் விற்று துட்டு சம்பாதிப்பதற்காகவா?'

'மன்னா! அவர்கள் நாடோடிகள் அல்ல. அவர்கள் எதிரி நாட்டு படை வீரர்கள். நமது நாட்டின் மீது படையெடுப்பதற்காக பதுங்கியுள்ளனர். அந்த இரும்புக்குழாய்கள் அரிசிமாவைக் கொட்டி அடுப்பில் வேகவைத்து புட்டு சுடும் குழாய்கள் அல்ல. அதில் வெடிமருந்தை கொட்டி பற்றவைத்தால் நமது நாட்டினை பஸ்பம் ஆக்கிவிடும் பீரங்கி எனும் பிரம்மாண்ட ஆயுதங்கள் மன்னா!'

'ஆ! ஆபத்து! தளபதியாரே! உடனே வெள்ளைக்கொடிகளை தயார் செய்யுங்கள்!'

*************************************************************************************